×

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து

ராசிபுரம், மே 5: ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் குப்பை கிடங்கில், திடீரென தீப்பிடித்ததால், கரும்புகை எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் அடுத்த அரசு மருத்துவமனை மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பின்புறம் குப்பை கிடங்கு உள்ளது. குருசாமிபாளையம், பில்லாநல்லூர் பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பைகள் தனித்தனியாக கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே மயானமும் உள்ளது. நேற்று மாலை, குப்பை கிடங்கில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அச்சமடைந்து பஞ்சாயத்து நிர்வாகம், ராசிபுரம் தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால், புகை மண்டலம் தொடர்ந்து வெளியேறி கொண்டே இருந்தது. பொக்லைன் வைத்து குப்பைகளை அகற்றினால், அங்கும் தீ அணையாமல் எரிந்து கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் தீரவே, பஞ்சாயத்து நிர்வாக வாகனங்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, அதனை தீயணைப்பு வாகனத்தில் ஏற்றி மீண்டும் தீயை அணைத்தனர். நள்ளிரவு வரை தீயை அணைக்கும் பணி நடந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘குப்பை கிடங்கிற்கு அருகே பட்டாசுகள் வெடித்தார்கள். அதிலிருந்து பரவிய தீப்பொறி, குப்பை கிடங்கில் பட்டு தீ பற்றி இருக்கலாம். பள்ளி விடுமுறை மற்றும் மருத்துவமனையில் குறைந்த நோயாளிகள் இருந்ததால் எந்தவித தொந்தரவும் ஏற்படவில்லை,’ என்றனர்.

The post குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Kurusamipalayam ,Government Hospital ,Panchayat Union Primary School ,Billanallur ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...